Madhavaram fake documents | பல கோடி சொத்து
சென்னை, மாதவரம் பகுதியில் சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தினை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து இரண்டடுக்கு மாடி வீடு கட்டிய நபரை மத்திய குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.
சென்னை கொளத்தூர், பூம்புகார் நகரில் வசித்து கொண்டு நகைப்பட்டறை நடத்தி வரும் திருமதி.பிரியங்கா, பெ/வ.30 என்பவருக்கு சொந்தமான மாதவரம் பொன்னியம்மன்மேடு, தணிகாச்சலம் நகரில் உள்ள பிளாட் எண்.138ல் உள்ள 2,134 சதுர அடி கொண்ட சுமார் ரூபாய் 3 கோடி மதிப்புள்ள சொத்தினை சந்திரன் மற்றும் சிலர் போலியான ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் சொத்து ஆவணங்களை புகார்தாரருக்கு தெரியாமல், மேற்படி நிலத்திற்கு தான்தான் உரிமையாளர் என்று ஆவணங்களை தயார் செய்து கொளத்தூர EB அலுவலகத்தில் சமர்ப்பித்து புகார்தாரருக்கு உரிய நிலத்தில் அடுக்குமாடி வீடு கட்ட வேண்டி EB கனெக்ஷன் பெற்றும், மேற்படி அந்த சொத்தில் இரண்டு அடுக்கு கொண்ட வீடு கட்டியும் மோசடி செய்து சொத்தினை ஆக்கிரமித்து அபகரித்துள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு, நில மோசடி புலனாய்வு பிரிவு, உதவி ஆணையாளரால் வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளரால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் உடனடி விசாரணை செய்து, உரிய நடவடிக்கை மூலம் விசாரணை செய்து எதிரிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்திட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி.A.ராதிகா, இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின் படி, காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தேடி வந்த நிலையில் மேற்படி சொத்தினை போலியான ஆவணங்கள் மூலம் போலியான பத்திரத்தினை தயார் செய்து மேற்படி சொத்தில் இரண்டு அடுக்கு மாடி கொண்ட வீடு கட்டி மோசடி செய்து சொத்தினை ஆக்கிரமித்து அபகரித்து குற்றச்செயல் புரிந்த சென்னை, கொளத்தூர், பூம்புகார் நகர், 8-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த சந்திரன், என்பவரை கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் கனம் நீதித்துறை நடுவர், CCB & CBCID எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட எதிரி சந்திரன், திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவில் மருத்துவ இடம் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என தெரியவந்தது.
மேலும் தொடர்புடைய எதிரிகள் குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
