90 lakhs fraud | ரூ.90 இலட்சம் மோசடி
சைதாப்பேட்டையிலுள்ள தனியார் வங்கியில் தங்க நகைகளை வேறொருவர் பெயரில் அடமானம் வைத்து ரூ.90 இலட்சம் மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் வங்கி மேலாளர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, சைதாப்பேட்டை, VGP சாலையில் வசித்து வரும் சுலைமான், என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சுலைமான், கிண்டி, லாயர் ஜெகநாதன் தெருவிலுள்ள Catholian Syrian Bank (CSB) வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துக் கொண்டு, அடிக்கடி வங்கிக்கு சென்று பணம் செலுத்தியும், பணம் எடுத்தும் வந்த நிலையில், அவ்வங்கியின் மேலாளர் சுவாமிநாதன் என்பவர் நன்றாக பேசி பழகி சுலைமானிடம், நீங்கள் பணம் எடுக்க வேண்டும் என்றால் வங்கிக்கு நேரில் வர வேண்டாம் நானே ஊழியரை அனுப்புகிறேன் என்று கூறியதால் சுலைமான் பணம் எடுக்க தேவைப்படும்போது, மேலாளர் சுவாமிநாதனை தொடர்பு கொண்டவுடன் அவர் ஒரு ஊழியரை தனது வீட்டிற்கு அனுப்பி வைத்து, படிவங்களை பூர்த்தி செய்து பணம் கொடுத்துவிடுவார்.
சுலைமான், மேலாளர் சுவாமிநாதனை தொடர்பு கொண்டு அவசர தேவைக்காக தங்க நகைகளை அடகு வைக்க வேண்டும் என கேட்டபோது, சுவாமிநாதன், பிரசாத் என்ற வங்கி காசாளரை வீட்டிற்கு அனுப்பியதன்பேரில், சுலைமான், தன்னிடமிருந்த 162 சவரன் தங்க நகைகளை கொடுத்து, படிவங்களில் கையெழுத்திட்டு கொடுத்ததாகவும், பின்னர் மேலாளர் சுவாமிநாதனை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டபோது, சர்வர் வேலை செய்யவில்லை, ஆடிட்டிங் நடைபெறுகிறது என காலம் தாழ்த்தியதால், சுலைமான் வங்கிக்கு நேரில் சென்று விசாரித்தபோது, மேலாளர் சுவாமிநாதன் வங்கியில் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்ததாகவும், ஆகவே, தன்னை ஏமாற்றி 162 சவரன் தங்க நகைகளை அபகரித்துக் கொண்ட மேலாளர் சுவாமிநாதன் மற்றும் வங்கி உழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தனது 162 சவரன் தங்க நகைகளை மீட்டு தரும்படி, சுலைமான் J-1 சைதாப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
J-1 சைதாப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் , தனியார் வங்கியில் தீவிர விசாரணை செய்ததில், வங்கி மேலாளர் சுவாமிநாதன், காசாளர் பிரசாத் மற்றும் அவ்வங்கியில் ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து, சுவாமிநாதன் கொடுக்கும் தங்க நகைகளை உபயோகத்தில் இல்லாத வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் அடமானம் வைத்து, போலி கையெழுத்துக்கள் இட்டு பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதும், இது போல புகார்தாரர் சுலைமானிடமிருந்து 162 சவரன் தங்க நகைகளை பெற்றுக் கொண்ட மேலாளர் சுவாமிநாதன் வேறொருவர் பெயரில் அதே வங்கியில் அடமானம் வைத்து ரூ.90 இலட்சம் பணம் பெற்று மோசடி செய்து, தலைமறைவானதும் தெரியவந்தது.
அதன்பேரில், காவல் குழுவினர் மேற்படி வழக்கில் தொடர்புடைய எதிரிகள் 1.பிரசாத், 25, (காசாளர்), புழுதிவாக்கம், சென்னை, 2.திவாகர், வ/32, (Bank Operating Manager), கே.கே.நகர், சென்னை ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதனை தொடர்ந்த மேற்படி வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் வங்கி மேலாளர் சுவாமிநாதன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அடிக்கடி லோகேஷனை மாற்றியும் செல்போன் எண்ணை மாற்றியும் தலைமறைவாக இருந்து வந்த எதிரியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.அருண், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் கூடுதல் ஆணையர் தெற்கு திரு.கண்ணன், இ.கா.ப, அவர்கள் அறிவுரையின் பேரில், தென் மண்டல இணை ஆணையர் திரு.B.C.கல்யாண், இ.கா,ப அவர்களின் ஆலோசனையின் பேரில் அடையாறு துணை ஆணையர் திரு.பொன் கார்த்திக் குமார் அவர்கள் நேரடி மேற்பார்வையில், சைதாப்பேட்டை உதவி ஆணையர் திரு.சீனிவாசன் தலைமையில், சைதாப்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசாருக்கு எதிரி தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சைதாப்பேட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் குழுவினர் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்துக்கு விரைந்து சென்று தக்க புலன் வைத்து எதிரி முன்னாள் வங்கி மேலாளர் சுவாமிநாதன் பாபநாசம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து கத்தோலிக் சிரியன் வங்கியில் வேறொருவர் பெயரில் அடமானம் வைத்திருந்த 162 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட எதிரி சுவாமிநாதனை தெலுங்கானா மாநிலம், சைப்ராபாத் 6வது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி Transit Warrant பெற்று, சென்னை அழைத்து வந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்
