karur supreme court | உச்சநீதிமன்றம் வேதனை
பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுப்பது தொடர்பான வழக்கில், ‘மைதானத்தின் கொள்ளளவை தாண்டி மக்கள் கூடினால் என்ன செய்வது?’ என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீதிபதி சூர்ய காந்த், ‘தங்களது அடிப்படை உரிமை எனக்கூறி டெல்லியில் போராட்டம் நடத்துவோரை, பள்ளி குழந்தைகள், நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு குறிப்பிட்ட இடத்தில் நடத்துமாறு நம்மால் நெறிப்படுத்த முடியும்.
ஆனால் சென்னையில் ஒரு பேரணி நடப்பதாக வைத்துக்கொள்வோம்; அங்குள்ள மைதானத்தில் 10,000 பேர் மட்டுமே கூட முடியும் என்ற நிலையில், திடீரென 50,000 பேர் திரண்டால் என்ன செய்வது? அடிப்படை உரிமைகளுக்காக மக்கள் கூடுவதை எவ்வாறு தடுக்க முடியும்? அனைத்து ஊர்வலங்களுக்கும் பொதுவான உத்தரவுகளை பிறப்பித்தால், அதனை காவல்துறையினரால் எப்படி அமல்படுத்த இயலும்?’ என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். குறிப்பிட்ட சூழலுக்கு மட்டுமே உத்தரவிட முடியுமே தவிர, அனைத்து கூட்ட நிகழ்வுகளுக்கும் பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இது நடைமுறையில் பெரும் சவாலானது என்ற கருத்தை பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு உள்துறை அமைச்சகம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையம் ஆகியோர் ஒரு கொள்கை முறை வழிகாட்டு முறைகளை எடுக்க வேண்டும். அதில் பாதுகாப்பு நடைமுறையும் நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டும். மாநில அரசுகளும் இது சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தலோடு கூடிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
