Vijay Latest Speech |மோடி ஜி வந்தா பண்ணுவீங்களா? – விஜய்
2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாவட்டம் வாரியாக தேர்தல் பரப்புரை தொடங்கியுள்ளார். கடந்த வாரம், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த நிலையில், இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் பேசினார். நாகப்பட்டினம் அண்ணா சிலை அருகே விஜய் பேசினார். இதில் பேசிய விஜய் , எல்லாருக்கும் வணக்கம், இப்ப நான் எந்த மண்ணில் நிற்கிறேன் தொியுமா. நாகூர் ஆண்டவர்கள் அன்போட, நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியுடன், கடல் தாய் மடியில் இருக்கும் என் மனதிற்கு நெருக்கமான நாகை மண்ணில் இருக்கிறேன். நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என்றும் ஒரு மீனவ நண்பனாக இருக்கிற விஜயின் அன்பு வணக்கங்கள். கப்பல் இறங்கும் பொருட்களை எல்லாம் விற்பனை செய்வதற்காக அந்த காலத்தில் அந்தி கடைகள் நாகப்பட்டினத்தில் இருக்கும் என்று கேள்விப்பட்டு உள்ளேன். மீன் பிடிக்கும் தொழில், மற்ற தொழில்கள், விவசாயம், எந்தப் பக்கம் திரும்பினாலும் எப்படிப் பார்த்தாலும் உழைக்கிற மக்கள் இருக்கும் ஊர் தான் நாகப்பட்டினம் . மத வேறுபாடு இல்லாத, அனைவருக்கும் பிடித்துப் போன மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்கிற உங்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த சிறப்பு வணக்கம்.
தமிழகத்தில் மீன் ஏற்றுமதியில் 2-ம் இடத்தில் இருப்பது நாகப்பட்டினம் துறைமுகம் தான். அங்கு நவீன வசதிகளுடன் மீன் பதப்படுத்துகிற நவீன தொழிற்சாலை இல்லை. அது மட்டுமின்றி அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் இல்லாமல், ரொம்ப அதிகமாக குடிசை இருக்கும் ஊர் நம்ம நாகப்பட்டினம்தான். இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் எங்கள் ஆட்சி தான் சாட்சி என்று அடுக்குமொழியில் பேசி, அதைக் கேட்டு காதில் ரத்தம் வந்தது தான் மிச்சம். இவர்கள் ஆண்டது பத்தாதா. பத்தாதா. மக்கள் தவிப்பது பத்தாதா.
இலங்கை கடற்படையால் நம்ம மீனவர்கள் தாக்கப்படுவதையும் அதற்கான காரணம், தீர்வு பற்றியும் மதுரை மாநாட்டில் பேசியிருந்தேன். அது ஒரு தப்பா . மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுக்காக நிற்பதும் நமது கடமை நமது உரிமை. நான் மீனவர்களுக்காக இன்று நேற்று அல்ல. இதே நாகப்பட்டினத்தில் 14 வருடத்திற்கு முன்பு 2011ல் பிப்ரவரி 22 அன்று மீனவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஒரு பொதுக்கூட்டம் நடத்தினேன். இந்த விஜய் களத்திற்கு வருவது ஒன்றும் புதிதல்ல. முன்பெல்லாம் விஜய் மக்கள் இயக்கம் என்ற இயக்கமாக வந்து நிற்போம். தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கமாக வந்துள்ளோம். அவ்வளவு தான் வித்தியாசம். அன்றும் இன்றும் எப்போது மக்களுக்காக, மக்களோடு மக்களாக நிற்பது தான். இது புரிந்தவர்களுக்குப் புரிந்தால் சரி. மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் இதே சமயத்தில், தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்கள் இலங்கையில் இருந்தாலும், உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தாய் பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கிற அவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை. மீனவர்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஈழத் தமிழர்களின் கனவுகளும் வாழ்க்கையும் ரொம்ப முக்கியம். மீனவர்களின் கஷ்டத்தைப் பார்த்துவிட்டு ஒரு பெரிய கடிதம் எழுதிவிட்டு அதைவிட அமைதியாகப் போவதற்கு நாடகம் ஆடும் திமுக அரசு கிடையாது. மற்ற மீனவர்கள் இந்திய மீனவர்கள் நம்ம மீனவர்கள் தமிழக மீனவர்கள் என்று பிரித்து பேசுவதற்கு நாம் ஒன்றும் பாசிச பாஜக கிடையாது. பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண்பதுதான் நமது முக்கிய அஜந்தா என ஆவேசமாக பேசினார்.
