Thiruvallur crime news | மனைவி நடத்தையில் சந்தேகம்
டிரம்மில் மனைவி உடல்…ஷாக் கொடுத்த கணவன்
கும்மிடிப்பூண்டி அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடித்து கொலை செய்து டிரம்மில் அடைத்து மண்ணில் புதைப்பு. இரண்டு மாதங்களுக்கு முன் மனைவியை கொலை செய்து புதைத்ததாக கூறிய கணவன் கைது. சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய காவல்துறையினர் தீவிரம்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த துராப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் 39. பெயிண்டிங் உள்ளிட்ட கூலி தொழில் செய்து வந்த சிலம்பரசனுக்கும் பிரியா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி பிரியாவின் நடத்தை காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதில் மனைவி பிரியா அவ்வப்போது தமது தாய் வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் சமாதானம் செய்து மீண்டும் கணவன் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக பிரியா கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக சிலம்பரசனின் வீட்டின் அருகே வசிப்பவர்களிடம் கூறிவந்துள்ளார். தீபாவளி பண்டிகையான நேற்று பிரியாவின் சகோதரர் அவரது வீட்டிற்கு வந்து தனது அக்கா எங்கே என கேட்டபோது, சிலம்பரசன் நடத்தை சரியில்லாத காரணத்தால் உனது அக்காவை அடித்து கொலை செய்து புதைத்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியாவின் சகோதரர் இது குறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிலம்பரசனை பிடித்து நடத்திய விசாரணையில் மனைவியை கொன்று புதைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து சிலம்பரசனை பிடித்து புதைத்ததாக கூறப்பட்ட எலவூர் ஏழு கண் பாலம் அருகே உள்ள பகுதியில் சடலத்தை தோண்டி எடுத்து வட்டாட்சியர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
