Meera mithun case | சென்னை உயர் நீதிமன்றம்
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கெதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் தான் மனுத்தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக கூறி அளிக்கப்பட்ட புகாரை அடுத்து மீறி மிதுனுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2021ஆம் ஆண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மீரா மிதுன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், தினமும் 20 மாத்திரைகள் எடுத்து வருவதால் தமது உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊட்டச்சத்து குறைப்பாடும் அதிகளவில் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் விசாரணையை எதிர் கொள்ள முடியாத நிலையில் உள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி A.D.ஜெகதீஷ் சந்திரா, வழக்கை ரத்து செய்யக்கோரி விசாரணை நீதிமன்றத்தில் தான் மனுத்தாக்கல் செய்ய முடியும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
