Tiruvallur road protest | காலவரையற்ற வேலை நிறுத்தம்
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியலில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ளவர் லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், எம். ஆர்.பி., செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், அரசு ஊழியர்கள் பணி சுமையை குறைக்க அலுவலக பணி நேரத்துக்கு பின்பும் விடுமுறை தினங்களிலும் ஆய்வு கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும், அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். பெண் அரசு ஊழியர்களுக்கு அரசு சிறப்பு சலுகைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 2026 ஜனவரி மாதம் முதல் வாரம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளப் போவதாகவும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் எச்சரித்தனர்.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி தலைமையில் போலீசார் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர் 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
