Aganda 2 release | திரையரங்குகளில் அகண்டா 2
நடிகர் பாலகிருஷ்ணாவின் அகண்டா 2 படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் டிசம்பர் 12ஆம் தேதி முதல் திரையரங்குகளில் அகண்டா படத்தை திரையிட 14 ரில்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
EROS international Media limited பட நிறுவத்துக்கும், 14 Reels Entertainment Private Limited என்ற நிறுவனத்துக்கும் இடையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்துள்ளது.
இதில், EROS நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 11 கோடியே 22 லட்சம் ரூபாயை 14 சதவீத வட்டியுடன், 27 கோடியே 70 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என, 14 reels நிறுவனத்திற்கு மத்தியஸ்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை அமல்படுத்தாமல், நடிகர் பாலகிருஷ்ணா நடித்துள்ள அகண்டா 2 திரைப்படத்தை வெளியிட 14 Reels நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என EROS நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த வழக்கு கடந்த வாரம், நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் சி குமரப்பன் அடங்கிய அமர்வு, இந்த பிரச்சினை தொடர்பாக தனி நீதிபதி முன் உள்ள வழக்கு விசாரணைக்கு பட்டியலிடும் வரை படத்தை வெளியிட கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது.
மேலும், பணப்பிரச்சனை தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்போது, தடையை நீட்டிப்பது அல்லது நீக்குவது குறித்து தனி நீதிபதி முடிவெடுத்துக் கொள்ளலாம் என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி நீதிபதி N.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்த அடுத்த மூன்று நாட்களில், பணத்தை கொடுப்பது குறித்து இரு தரப்புக்கும் இடையே செட்டில்மெண்ட் ஆகிவிட்டதாக இரு தரப்பும் தெரிவித்துள்ளனர்.
அதை ஏற்றுக்கொண்டு நீதிபதி, அகண்டா 2 படத்தை வெளியிட விதிக்கப்பட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி அகண்டா 2 படத்தை வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 11) மாலையில் சிறப்பு காட்சியாகவும், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) முதல் திரையரங்குகளிலும் வெளியாகும் என 14 ரீல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
